பாட்டி
பள்ளிக்கூடம் விடுவதற்குள்ளாகவே
பாதியில் வேலைக்காரன் வந்து
அனுமதி பெற்று என்னை
அழைத்து வந்தான் வீட்டிற்கு
பாட்டி இறந்துவிட்டாளாம்.
வீட்டுக் கூடத்தில் கிடத்தி இருந்தார்கள்
பாட்டியை.
வெள்ளைத் துணி, பூமாலைகள்
சுற்றிலும் அமர்ந்திருந்த
சொந்தங்களின் அழுகுரல்கள்.
பாட்டியின் முகத்தையே
பார்த்துக் கொண்டிருந்தேன்.
யாரோ ஒரு உறவுக்காரர்
கைத்தாங்கலாய் அழைத்துப்போய்
உட்கார வைத்தார் தூணின் அடியில்.
துக்கச் சாயம் வீடெங்கும்
பூசப்பட்டிருந்தது.
கையருகில் பாட்டி உபயோகித்த
ஊசி, நூல்ப் பெட்டி.
மெல்ல எடுத்து கைகளுக்குள்
வைத்துக் கொண்டேன்.
ஒவ்வொரு முறையும்
ஊசியில் நூல் ஏற்ற முயன்று
இயலாமல் தோற்றுப் போகும் தருணங்களில்
'அடே என்னப் பெத்த ராசா' என
ஊருக்கே கேட்பது போல
உரத்த குரலில் உதவிக்கு அழைக்கும்
பாட்டியின் நினைவு சுட்டது என்னை.
ஊசிப்பெட்டி பாட்டியின்
கைகளாய் மாறியிருக்க
பற்றிக் கொண்டேன் இறுக்கமாய்
விட்டு விட மனமின்றி.
கைகளாய் மாறியிருக்க
பற்றிக் கொண்டேன் இறுக்கமாய்
விட்டு விட மனமின்றி.
பிரமை என்று உணர்ந்த கணம்
அழத் தொடங்கினேன்
பெருங் குரலெடுத்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக