5.10.12

இனியவளே

அன்பே...
அந்த நாட்கள்
காதல் தேசத்தின்
ராஜ வீதிகளில்
நாம்
உலா வந்திட்ட
உன்னத நாட்கள்.

ஒரு நாள்
நகரின் மையத்திலிருந்த
மகளிர் கல்லூரி ஒன்றில்
தேர்வு எழுதிட நீ
தேவதையாய் வந்திருந்தாய்.

தேன் மொழியே...
தேர்வு அறைக்கு நீ சென்றபின்
கல்லூரி வளாகத்தின் உட்புறம்
நிழற்குடைகளாய் நெடிதுயர்ந்து
நின்றிருந்த மரங்களில்
ஒன்றின் கீழ் நான்
உனக்காகக் காத்திருந்தேன்

நேரக் குதிரை
நகரவியலாமல்
நொண்டிக் கொண்டேயிருந்தது

எனது கைவிரல் நகங்கள்
கரைந்து கொண்டிருந்தன

ஒருவழியாய்
தேர்வின் நேரம்
நிறைவு பெற்றதை
ஓசை எழுப்பி
உணர்த்தியது மணி

சற்று நேரத்தில்
நானிருக்கும் திசையில்
நந்தவனமாய் நீ
வந்து கொண்டிருந்தாய்

சற்றே தனித்திருந்த
சௌந்தர்ய சூழலில்
நாம்
காதலின் பாஷையில்
கலந்துரையாடினோம்

வெப்பத்தில் தாக்குண்ட
வெண் பனியாய்
நேரம்
விரைந்து கரைந்தது

பிரிய மனமின்றியே நாம்
விடை பெற்றுக் கொண்டோம்
இனியவளே
அப்போது
என் நினைவுகள் முழுக்க
நீ மட்டுமே நிறைந்திருந்தாய்
நீக்கமற!

அன்பே...
அந்த நாட்கள்
காதல் தேசத்தின்
ராஜ வீதிகளில்
நாம்
உலா வந்திட்ட
உன்னத நாட்கள்.













கருத்துகள் இல்லை: