25.10.14

வாழ்த்து


நடை மேடை மீது

அம்மாவின் கை பிடித்து

அன்னமென நடந்து வரும்

குழந்தைக்காக

அதிகப்படியான பூக்களை

உதிர்த்து மகிழ்கிறது

சாலையோர மரம்.


5.10.12

இனியவளே

அன்பே...
அந்த நாட்கள்
காதல் தேசத்தின்
ராஜ வீதிகளில்
நாம்
உலா வந்திட்ட
உன்னத நாட்கள்.

ஒரு நாள்
நகரின் மையத்திலிருந்த
மகளிர் கல்லூரி ஒன்றில்
தேர்வு எழுதிட நீ
தேவதையாய் வந்திருந்தாய்.

தேன் மொழியே...
தேர்வு அறைக்கு நீ சென்றபின்
கல்லூரி வளாகத்தின் உட்புறம்
நிழற்குடைகளாய் நெடிதுயர்ந்து
நின்றிருந்த மரங்களில்
ஒன்றின் கீழ் நான்
உனக்காகக் காத்திருந்தேன்

நேரக் குதிரை
நகரவியலாமல்
நொண்டிக் கொண்டேயிருந்தது

எனது கைவிரல் நகங்கள்
கரைந்து கொண்டிருந்தன

ஒருவழியாய்
தேர்வின் நேரம்
நிறைவு பெற்றதை
ஓசை எழுப்பி
உணர்த்தியது மணி

சற்று நேரத்தில்
நானிருக்கும் திசையில்
நந்தவனமாய் நீ
வந்து கொண்டிருந்தாய்

சற்றே தனித்திருந்த
சௌந்தர்ய சூழலில்
நாம்
காதலின் பாஷையில்
கலந்துரையாடினோம்

வெப்பத்தில் தாக்குண்ட
வெண் பனியாய்
நேரம்
விரைந்து கரைந்தது

பிரிய மனமின்றியே நாம்
விடை பெற்றுக் கொண்டோம்
இனியவளே
அப்போது
என் நினைவுகள் முழுக்க
நீ மட்டுமே நிறைந்திருந்தாய்
நீக்கமற!

அன்பே...
அந்த நாட்கள்
காதல் தேசத்தின்
ராஜ வீதிகளில்
நாம்
உலா வந்திட்ட
உன்னத நாட்கள்.













30.4.12

இலக்கை அறியாத அம்பு

 

நிலை கொள்ளாமல்
அங்கும் இங்கும்
அலை பாய்ந்தது மனம்.

விநாடிக்கொருமுறை
எதையோ தேடி, எதற்கோ ஆசைப்பட்டு...
இறுதி வரை எதுவும் கிட்டாமல் 
ஓடிக் களைத்துத் திரும்பிய 
மனதை விட்டு 
அதிக தூரத்திற்கு 
அன்னியப் பட்டுப் போயிருந்தது 
அமைதி.

இடை விடாமல் தேடி அலைந்ததில் 
திரும்பக் கிடைக்காமலேயே  போயின 
'நேரமும்' 'நிம்மதியும்'! 

20.3.12

குழந்தையும், மழைச்சாரலும்

கிண்ணத்தில் இருக்கும் பொரிகளை
பிஞ்சுக் கை நிறைய அள்ளி
சாப்பிட விழைகிறது குழந்தை.
ஒவ்வொரு முயற்சியிலும் ஒன்றிரண்டு தவிர
எஞ்சிய பொரிகள் எல்லாம்
மொட்டு விரல்கள் இடையே
மழைத் துளிகளாய் வழிந்தோடி
தரை விரிப்பான் எங்கும்
சிந்திச் சிதறுகின்றன.
குழந்தை உண்ணும் அழகை ரசித்தவாறே
சிந்திய பொறிகளை  மீண்டும் சேகரித்துக்
கிண்ணம் நிரப்பி மகிழ்கிறாள் அம்மா.
மழைச் சாரலைப் போலவே
எல்லா சமயங்களிலும் எல்லோராலும்
ரசிக்கப்படத் தக்கதாய் இருக்கிறது
குழந்தையும், அது சாப்பிடுகிற அழகும்.


30.10.11

பரிணாம வளர்ச்சி 
நண்பனின் வீட்டில் விருந்து.  
சம்பிரதாயமாய்  
சிற்றுண்டிகள் வாங்கிச் சென்று  
குழந்தையின் கையில் கொடுத்தேன். 
பெற்றுக் கொண்டதும் 
சம்பிரதாயமாய்
ஒரு புன்னகையைத்
தந்துவிட்டுப் போனது
குழந்தையும்.

29.10.11

மனத்தராசு 
நகரமும், கிராமமும் ஒரு நாள் என் 
கனவில் வந்தன சண்டையிட்டவாறே. 
நான்தான் சிறந்தவென்று நகரம் சொன்னது.
நானின்றி நீயில்லை என்று வாதிட்டது கிராமம். 

இருவரில் சிறந்தவரை
எனது மனத் தராசில் எடைபோட்டு 
தேர்வு செய்யலாம் என்றேன். 
ஒப்புக்கொண்டன இரண்டும்.

முதலில்
நகரத்தின் அம்சங்களையெல்லாம்
எடுத்து வைத்தேன் ஒரு தட்டில்
ஒவ்வொன்றாய்.
நியான் விளக்குகள், கண்ணைப்
பறிக்கும் விளம்பரப் பலகைகள் 
வித, விதமாய் மோட்டார் வாகனங்கள்
வானத்தையே தொட முயற்சிக்கும்
தொகுப்பு வீடுகள்
செல்வச் செழிப்பில் கொழிக்கும்
பன்னாட்டு நிறுவனங்கள்
பிரமாண்ட சாலைகள்
பிரமிக்க வைக்கும் வணிக வளாகங்கள்
சர்வதேச தரத்தில் கல்வி அளிக்கும்
பள்ளிகள், கல்லூரிகள்
பல்கலைக் கழகங்கள் 
அறிவையும், திறனையும்
செம்மைப்படுத்த உதவிடும்
சிறப்பு பயிற்சி மையங்கள்
அதிசயிக்க வைக்கும் பூங்காக்கள்
சிற்றுண்டிச் சாலைகள், கடற்கரை விடுதிகள்
ஆடையைத் தவிர வேறெதிலும்
சேமிப்பை விரும்பாத
நவீனயுக யுவதிகள்
வாழ்க்கையோடு கலந்துவிட்ட
வசதி, வாய்ப்புக்கள் என
எல்லாவற்றையும் எச்சரிக்கையோடு
அடுக்கி முடித்தேன்.
நல்ல எடையோடு
எதிர்புறத் தட்டை
ஏளனமாய்ப் பார்த்தது 'நகரம்'.

மறு தட்டிலோ
இயற்கை வளங்களான
மாசு படாத காற்று
வற்றாத நீர் நிலைகள்
பச்சைப் புல்வெளிகள்
மரங்கள், தோட்டங்கள்
மக்களின் அடிப்படைத் தேவையான
பயிர்கள், தானியங்கள் உற்பத்தி
பொதுநல நோக்கு, பரந்த மனப்பான்மை
எளியவனுக்கு உதவுதல்
எதிர்பார்ப்பற்ற அன்பு, ஊர் கட்டுப்பாடு
எளிய வாழ்க்கை முறை
உறவுகளையும், நட்புகளையும்
ஆராதிக்கும் பண்பு
மழை சார்ந்து நிற்கும்
மண்ணைச் சார்ந்து
பிழைப்பு நடத்துவதில்
பெருமை கொள்ளும் மக்கள்
நிலையற்ற வருமானத்திலும்
நிறைவாய் உணர்கிற மனப்பாங்கு
பிறருக்கு உதவிடத் தயங்காத
மனித நேயமிக்க ஈர மனங்கள் என
'கிராமத்தின்' அம்சங்களையெல்லாம்
கவனமாய் எடுத்து வைத்தேன்.
கூடுதல் எடையோடு
வெற்றி கண்டது 'கிராமம்'.

கடுமையான போட்டியில்
கிராமத்தின் வெற்றியை
குறிப்பாய்த் தீர்மானித்தது
எதுவாயிருக்கும்? என்று
எனக்குள் அப்போது
எழுந்தது ஒரு கேள்வி.

'மனிதம்' என்கிற
மகத்தான அம்சமே என 
அசரீரி ஒலிக்க
திடுக்கிட்டுக் கண் விழித்தேன்.
கலைந்து போயிருந்தது
கனவு.










பாட்டி
பள்ளிக்கூடம் விடுவதற்குள்ளாகவே
பாதியில் வேலைக்காரன் வந்து 
அனுமதி பெற்று என்னை 
அழைத்து வந்தான் வீட்டிற்கு
பாட்டி இறந்துவிட்டாளாம்.
வீட்டுக் கூடத்தில் கிடத்தி இருந்தார்கள் 
பாட்டியை. 
வெள்ளைத் துணி, பூமாலைகள்
சுற்றிலும் அமர்ந்திருந்த 
சொந்தங்களின் அழுகுரல்கள்.
பாட்டியின் முகத்தையே
பார்த்துக் கொண்டிருந்தேன். 
யாரோ ஒரு உறவுக்காரர்
கைத்தாங்கலாய் அழைத்துப்போய்
உட்கார வைத்தார் தூணின் அடியில்.
துக்கச் சாயம் வீடெங்கும்
பூசப்பட்டிருந்தது.
கையருகில் பாட்டி உபயோகித்த
ஊசி, நூல்ப் பெட்டி. 
மெல்ல எடுத்து கைகளுக்குள்
வைத்துக் கொண்டேன்.
ஒவ்வொரு முறையும்
ஊசியில் நூல் ஏற்ற முயன்று 
இயலாமல் தோற்றுப் போகும் தருணங்களில்
'அடே என்னப் பெத்த ராசா' என
ஊருக்கே கேட்பது போல 
உரத்த குரலில் உதவிக்கு அழைக்கும் 
பாட்டியின் நினைவு சுட்டது என்னை.
ஊசிப்பெட்டி பாட்டியின்
கைகளாய் மாறியிருக்க
பற்றிக் கொண்டேன் இறுக்கமாய்
விட்டு விட மனமின்றி.
பிரமை என்று உணர்ந்த கணம்
அழத் தொடங்கினேன் 
பெருங் குரலெடுத்து.



26.10.11

மண் வாசனை 

மனைவி, குழந்தைகளோடு 
விடுமுறையைக் கழிக்க 
நான் பிறந்து, வளர்ந்த 
ஊருக்கு வந்திருக்கிறேன் 
எட்டு ஆண்டுகள் 
இடைவெளிக்குப் பிறகு. 

பொறியியல் கல்லூரியில்
படிப்பை முடித்த பின்
'திரை கடலோடியும் திரவியம் தேட'
கைநிறைய சம்பளத்துடன்
வெளிநாட்டில் வேலை.

வித்தியாசமான கலாச்சாரம்
வேற்று மொழி 
ஏராளமான சலுகைகள்
எதிர்பாராத வசதிகள்
இனிய குடும்பமென
எல்லாம் இருந்தாலும்
எந்திரத்தனமாய் ஓடிக்கொண்டிருக்கிறது
வாழ்க்கை. 
நீண்ட இடைவெளிக்குப் பின்
சொந்த ஊருக்கு வந்ததில்
ஆர்வமும், மகிழ்ச்சியும்
எனக்குள் சற்று அதிகமாகவே 
இருந்தன. 
மனைவி, குழந்தைகளுக்கோ 
எல்லாமே அதிசயமாய்ப் பட்டது. 
பெரிதாய் மாறிவிடவில்லை
எங்கள் கிராமம்.
மந்தையம்மன் கோவிலும்
பேருந்து நிறுத்தமும்
சுற்றியிருக்கும் சிறு கடைகளும்
மாலை நேரங்களில்
ஆங்காங்கே கூடி நின்று 
அன்றாட நடப்புகளைப் 
பேசி மகிழும் மனிதர்களுமாய்
நான் சிறு வயதில் பார்த்து
ரசித்தவை எல்லாம்
அப்படியே இருந்தன. 
எங்களது வீடும்கூட...
புழக்கடையும், மாட்டுக் கொட்டமுமாய்
அதற்கே உரிய அழகினை 
இழந்து விடாமல் இருக்கிறது
இன்னமும் கூட. 
அம்மாவும், அப்பாவும்
ஆனந்தக் கண்ணீரோடு
ஆரத் தழுவி வரவேற்றார்கள். 
அண்ணன், அண்ணி
தம்பி, தங்கையென
சத்தியமாய் எல்லோருமே
சந்தோசப்பட்டார்கள். 

பால்ய நண்பர்களை
சந்தித்துப் பேசியபின்
குளக்கரை சாலையில்
வழக்கமாய் சிறு வயதில்
மாலைக் காற்று வாங்கும்
பாலத்தின் மேல் அமர்ந்தபோது 
குளிரூட்டப்பட்ட அறையும்,
குஷன் நாற்காலியும் 
எனது கண்களுக்கு
சாதாரணமாய்ப் பட்டன. 
பெற்றோருக்கும், பெரியோருக்கும் 
தெரியாமல் குதித்து விளையாடி
 நீச்சல் கற்றுக் கொண்ட 
 நல்லதங்காள் கண்மாய் 
 ஞாபகமாய்ச் சிரித்தது 
 என்னைப் பார்த்து. 
சுற்றங்களின் வீடுகளுக்கு
வலியச் சென்று பார்த்துவிட்டு
வீடு திரும்புகையில்
மனம் முழுக்க பரவிப்
படர்ந்திருந்தது அவர்களது
அன்பும், பாசமும்.
எந்தப் பிரதிபலனும்
எதிர்பாராத நண்பர்களின் நட்போ
எனது இதயத்தையே ஊடுருவி
உட்சென்று அமர்ந்து கொண்டது.
புல்கட்டு விற்கும் கருப்பையாவும்
விறகுக்கடை மாயாண்டியும்
அடையாளம் கண்டு ஓடி வந்து
நலம் விசாரித்துப் போனார்கள்
கண்களில் நீர் தளும்ப.
இடையில் வந்த முளைப்பாரி
திருவிழாவோ உள்ளத்தையே
கொள்ளை கொண்டது.
முப்பது நாட்கள் விடுமுறையும்
நிமிடங்களாய்க் கரைந்து போக
இதோ விமானத்தில்
பயணித்துக் கொண்டிருக்கிறோம்
மறுபடியும் பிழைப்பைத் தொடர.
இதயமெங்கும் ஏதோ ஒரு
அழுத்தம் நிரம்பியிருக்கிறது.
ஆழ்ந்த சிந்தனையில்
மூழ்கிப் போகிறேன்.
பின் ஏதோ ஒரு தெளிவுடன் 
தீர்மானித்துக் கொள்கிறேன் 
இனி ஒவ்வொரு வருடமும்
பிறந்த மண்ணில்தான்
விடுமுறையைக் கழிப்பதென்று.
மெல்லத் திரும்பி மனைவி,
குழந்தைகளைப் பார்க்கிறேன்
அவர்களது புன்னகை அதை
ஆமோதிக்கிறது அழுத்தமாய்.


8.3.11

நம்பிக்கை

தடை பட்டுக் கொண்டிருந்த
தங்கையின் திருமணம்
வீடு முழுக்க படர விட்டிருந்தது
சோகத்தின் நெடியை.
கலகலப்பும், கிண்டல் பேச்சுக்களும்
காணமல் போய்
நெடுநாட்களாகி விட்டிருந்தன.
தற்காலிகமாய்
பரிகாரங்களிலும்,
பிரார்த்தனைகளிலும்
ஆறுதல் தேடிக் கொண்டிருந்தார்கள்
அம்மாவும், அப்பாவும்.

எதிலும் ஓட்ட இயலாமல்
தவித்த மனதிற்கு
தனிமை மட்டுமே
தந்தது ஆறுதலை.
உறங்க நினைத்தாலும்
இமைகள்
இறங்க மறுத்தன.
மனக் குகைக்குள்
திக்குத் தெரியாமல்
திமிறி ஓடிக் கொண்டிருந்த
குழப்பமென்னும் குதிரையை
கட்டுப்படுத்தும் முயற்சியில்
களைப்பே மிஞ்சியது.

தூக்கம் வராமல்
தொலைந்து போனதில்
அகண்டு பரந்திருந்த 
ஆகாயத்தைப் பார்த்தபடியே
படுத்துக் கிடந்தேன்.
தேகம் தேய்ந்துகொண்டிருந்தாலும் 
ஒளி வீசும் தன் கடமையை
ஒத்திப் போடவில்லை நிலா.
எப்போது வேண்டுமானாலும்
எரிகற்களாகி விழப்போகும்
கனல்த் துண்டு நட்சத்திரங்களோ 
கண்சிமிட்டிச் சிரித்தன.
எங்கோ தூரத்தில்
மின்னல் கீற்றுக்கள்
சாட்டைகளாய் சுழன்று பின்
சட்டென்று மறைந்து போயின.
எல்லா நிகழ்வுகளையும்
உள் வாங்கிக் கொண்டு
அமைதி காத்தது வானம். 


எதுவோ புரிந்தது போலவும்,
ஒன்றுமே புரியாதது போலவும்
எண்ண அலைகள்
எழும்பி, எழும்பி
மனம் முழுக்கப்
பரவிப் படர்ந்தன . 
நடக்கும் நிகழ்வுகளுக்கு 
நாமா பொறுப்பு? 
நடப்பதை மட்டும் 
பார்த்துக் கொண்டிருக்கும் 
பாத்திரம் மட்டுமே  
தரப்பட்டிருக்கிறது 
உனக்கு எனச் சொல்லி
கெக்கரித்தது ஒரு குரல். 
இல்லையில்லை 
நடப்பவற்றை 
நமக்குச் சாதகமாய் 
மாற்றி கொள்வதற்க்கான 
மந்திர சாவி என்னவோ 
எல்லோரின் கைகளிலும்தான் 
கொடுக்கப் பட்டிருக்கிறது என
சற்றே கோபமாய்
தர்க்கம் செய்தது இன்னொன்று. 

நீண்ட நேர மனப் போராட்டத்தில்
எதைத்  தெரிவு செய்வது எனத்
தீர்மானிக்கும் முன்பே
தூங்கி  விட்டிருந்தேன்.
விடியலில் கண் விழிக்கையில்
புதிதாய் உணர்ந்தேன்
எல்லாமே புதிதாய்.





28.2.11

கவிதையும் காதலும்

கற்பனையும் பொய்யும்தான்
கவிதைக்கு அழகு என்றாய்.
என் காதலும்
கவிதையாகிப் போனது
பொய்யென்று நீயதை
புறக்கணித்து விட்டதால்.

ஆராதனை

எங்கள் தெரு முனையைக் 
கடக்கும் போதெல்லாம் 
நாயரின் தேநீர்க் கடையைப் 
பார்த்துக்கொண்டே செல்வது 
பழக்கமாகிப் போனது எனக்கு. 

குவளையை உயரப் பிடித்து 
நேர்த்தியாயும், அழகாகவும் 
நாயர் தேநீர் ஆற்றும் பாங்கிற்கு 
நான் அடிமையாகிப் போனேன்.

சீரான நூலைப் போல 
சிந்தாமல், சிதறாமல் 
தேநீர் ஆற்றுவது ஒரு 
கலையாகத் தெரியும் என் 
கண்களுக்கு. 

இத்தனைக்கும் ஏனோ அவரிடம் 
தேநீர் வாங்கி அருந்த மட்டும் 
தோன்றியதில்லை ஒரு போதும். 
அனாயாசமாய் நாயர் தேநீர் ஆற்றுவதும் 
அதைப் பார்க்க நேர்கையில் நான் ரசிப்பதும் 
அனிச்சைச் செயல்களாய்
அரங்கேறிக் கொண்டிருந்தன. 

திடீரென ஒரு மழை நாளில் 
கடை மூடிக் கிடக்க 
கதவின் மேல் ஒட்டப்பட்டிருந்த
'கண்ணீர் அஞ்சலி' சுவரொட்டி 
அறிவித்தது நாயரின் 
அகால மரணத்தை. 

சிறு கும்பல்களாய் 
ஆங்காங்கே நின்றிருந்த 
நாயரின் வாடிக்கையாளர்களும் 
நண்பர்களும் 
தங்கள் வேதனையை 
விசும்பியும், அழுதும் 
வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். 

என்னையும் அறியாமல் 
ஏதோ ஒரு கும்பலில் கலந்த பின் 
நானும் அழுதேன் 
நாயருக்காக... 
அவரது 
நண்பனாகவும் இல்லாமல் 
வாடிக்கையாளனாகவும் இல்லாமல்.





 

13.2.11

இளகின மனசு

ஒரு கோடைக்கால ஞாயிற்றுக்கிழமையில்
வாசலில் வந்த ஐஸ் வண்டிக்காரனிடம்
குச்சி ஐஸ் வாங்கி சுவைக்கத் துவங்கியதும்
கம்பிகளினூடே
ஏக்கம் நிறைந்த கண்களுடன்
என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்
எதிர் வீட்டுச் சிறுவன்!

சிறுவனுக்கு வாங்கித் தருவதிலும்
சிக்கல் இருப்பதாய்த் தோன்ற
தொடர்ந்து சுவைக்கவும்
மனமின்றிப் போக
கையிலிருந்த ஐஸைத்
தூர எறிந்தேன்!

கொஞ்சம், கொஞ்சமாய்
கரையத் தொடங்கியது
குச்சி ஐஸ்!
கூடவே...
எனது இயலாமையும்
சிறுவனின் ஏக்கமும்!


8.2.11

கொசு

காதருகில் ரீங்காரமிட்டுக்  
கடந்து சென்றது கொசு!
எழுந்தோடிச் சென்று
கதவு, சன்னல்களை மூடி
புகைச்சுருளைப் பொருத்தி வைத்து
முழு வேகத்தில்
மின் விசிறி சுழல விட்டு
மூச்சிறைக்க அமர்ந்து கொண்டேன்
நாற்காலியில்!
மறுபடியும் காதருகில்
அதே ரீங்காரம்...
கைகளை ஆயுதமாக்கிக்
காத்திருந்தேன்
அடுத்த முறை அதை
அடித்து ஒழித்துவிடும் எண்ணத்தோடு!
பின் கழுத்தில், கைகளில்,
கணுக்காலில் என
இடங்களை மாற்றி, மாற்றி
வெற்றிகரமாய் கடித்தது கொசு!
பலமுறை அடிக்க முற்பட்டும்
தப்பித்துக் கொண்டேயிருந்தது
அகப்படாமல்!
நீண்ட நேரப் போராட்டத்தில்
எனது கைகளுக்குள்
சிக்கிக் கொண்டது ஒரு வழியாக!
எதையோ சாதித்துவிட்ட திருப்தி
எனக்குள்!
உள்ளங்கை விரித்துப் பார்த்தேன்...
ஒட்டிய நிலையில்
உயிரை விட்டிருந்தது
பொல்லாத கொசு!
அதைக் கொன்று விடும் தீவிரத்தில்
பைத்தியக்காரனைப் போல
பலமுறை என்னை நானே
அடித்துக் கொண்டதை சுட்டிக்காட்டி
நகைப்பது போலிருந்தது
நசுங்கிக் கிடந்த கொசுவைப் பார்க்கையில்!







4.2.11

மறதி

மன வயலின்
நினைவுப் பயிர்களை
அவ்வப்போது
மேயும் மாடு!

இயல்பு வாழ்க்கை

பைக்குள் திணிக்கப்பட்ட
பழைய துணிகளாய்
பேருந்திற்குள்
பிதுங்கிப் பயணிக்கிறது
மக்கள் கூட்டம்!
செருப்பணிந்த கால்களின் மிதி
மூச்சைத் திணறடிக்கும் நெரிசல்
அருவெருக்கத்தக்க உரசல்கள்
அநாகரீகத் தள்ளு முள்ளு
நடத்துனரின் வசவு...
இவற்றின்
எந்தப் பாதிப்பையும்
பிரதிபலிக்கவில்லை
பேருந்தை விட்டு
இறங்கிச் செல்வோரின்
முகங்கள்!

உண்மைக் காதல்

அன்பே... அது ஒரு அந்திப் பொழுது!
கடற்கரையில் நாமிருவரும்
பக்கம், பக்கமாய்!

எழும்பி விழுந்த அலைகளைப் பார்த்து
ஆர்ப்பரித்தன உன் கண்கள்!

உருச் செய்த வீட்டுப் பாடத்தை
ஆசிரியரிடம்
நடுக்கத்துடன் ஒப்புவிக்கும்
ஒரு மாணவனைப் போல
கண்மணி உன்னிடம் என்
காதலைச் சொன்னேன்
கவனமாக!

நீயோ
மௌனமாய் எழுந்துனது
ஆடையில் ஒட்டிக் கிடந்த
மணலை உதிர்த்தவாறே
மறைந்து போனாய்
ஒரு புள்ளியாகி!

இனியவளே...
உன்னிடம் நான் உரைத்த
உண்மைக் காதல்
கலந்து கிடக்கிறது
நீ உதிர்த்துச் சென்ற
மணல்களில்
இன்னமும் கூட!

மொழி


சன்னலோர மரக்கிளையில்
உட்கார்திருந்த ஒற்றைக்கிளி
கீ... கீ...யென
கத்திக் கொண்டேயிருந்தது
சீரான இடைவெளியில்!

என்னவாயிற்று?
இரை கிடைக்கவில்லையா?
தன் குஞ்சுகளைத் தொலைத்துவிட்ட
தவிப்பைச் சொல்கிறதா?
காதல் ஜோடியைக்
காணவில்லை என்கிறதா?

சிறிதும் எனக்கு
அர்த்தப்படவில்லை
அதன் மொழி!

ஆயினும்
காற்றோடு கலந்து வந்த
கிளியின் குரல்
விட்டுச் சென்றது எனக்குள்
ஒரு மெல்லிய சோகத்தை!

இரவில் வானம்

வட்டுக் கருப்பட்டியாய்
வட்ட வடிவ நிலா.
சுற்றிலுமிருந்து
சுவைத்திடப் படையெடுக்கின்றன
விண்மீன் சிற்றெறும்புகள்!